Friday, April 10, 2020

ஊரடங்கின் மத்தியில் தமிழ் கல்வி 1 : Bauhinia tomentosa

    என்னடா! தமிழ் கல்வி என்று எழுதிவிட்டு ஆங்கிலத்தில் ஏதோ அறிவியல் பெயர் எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? எல்லாம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டத்தான்.

    கரோனா-வினால் ஊரடங்கு ஆரம்பித்த நாள்முதல் என் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளத் தோதான ஒரு நடவடிக்கையை தேடிக் கொண்டிருந்தேன். நூல் வாசிப்பதில் எனக்கு ஆர்வமிருந்ததால் சில காலம் அதில் கடந்தது. ஒவ்வொரு புத்தகம் முடித்த பிறகும் அடுத்து என்ன படிப்பது என்ற ஒரு குழப்பம் ஏற்படுமல்லவா? அப்படியான ஒரு குழப்பத்தின் விடையாக ஔவையார் பாடல்கள் படிப்பது என்று தீர்மானித்தேன்.

    ஔவையார் என்றாலே நமக்குத் தோன்றும் பாடல்கள் 'ஆத்திசூடி' தானே. ஆத்திசூடி-யில் அனைத்துப் பாடல்களும் நமக்கு தெரிந்திராவிட்டாலும் 'அறம் செய விரும்பு' மட்டுமாவது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் பள்ளியில் ஆத்திசூடி-யில் படித்தது வெறும் பன்னிரண்டு பாக்கள் தானே? ஆனால் மொத்தம் 109 பாக்கள் உள்ளன என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

   ஒவ்வொரு பா-வையும் இங்கு விளக்கி உங்களை சலிப்பூட்டப் போவதில்லை. இணையத்தில் தேடி நீங்கள் படித்துக் கொள்ளலாம் (ஆர்வமிருந்தால்). Bauhinia tomentosa-வுக்கு வருவோம் இப்பொழுது.


    ஆத்திசூடி-யின் பெயர்க்காரணம் என்ன தெரியுமா? நம் பள்ளிக் காலத்தில், நாம் படித்த அனைத்து செய்யுள்களுக்கும் முதன்மையாக 'கடவுள் வாழ்த்து' என்று இருந்தது ஞாபகம் இருக்கிறதா? அப்படி இந்த 109 பாக்களுக்கும் ஔவையார் எழுதிய கடவுள் வாழ்த்து இதோ:

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


    இந்த கடவுள் வாழ்த்தின் முதல் இரண்டுவார்த்தைகளில் இருந்தே இதன் தலைப்பையும் 'ஆத்தி சூடி' என்று வைத்திருக்கிறார்கள். ஔவையார் வைத்தாரா? அல்லது இந்த நூட்களை பிற்காலத்தில் சேகரித்தவர்கள் வைத்தார்களா என்பது தெரியாது.

    இந்த கடவுள் வாழ்த்தின் அர்த்தம்:

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

    'அது என்ன திருவாத்தி பூ?' என்று நான் தேடியபோது தான் அந்தச் செடியின் அறிவியல் பெயரான Bauhinia tomentosa-வை அறிந்தேன். அதன் ஆங்கில பெயர் 'Yellow bell orchid tree'. நம் ஊரில் கூட சில இடங்களில் இந்த மரங்களை நீங்கள் பார்க்க நேரிடலாம்.

    'ஆத்தி சூடி' பற்றி இந்த தகவல்கள் எனக்கு சுவாரஸ்யமாகத் தோன்றியது. இதுவரை நீங்கள் படிக்கிறீர்களானால் உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். அல்லது 'கரோனா நேரத்தில் இது ரொம்ப முக்கியமா?' என்று கேட்டீர்களானால் உங்களுக்கு மற்றும் ஒரு துணுக்கு. இந்தத் திருவாத்தித் தாவரம், அதாவது Bauhinia tomentosa நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிரியை பெற்றுள்ளது. அதனால் திருவாத்தி-யை பார்த்தால் ஔவையார்-ஐ நினைத்துக் கொண்டு அதன் இலைகளையும் பூக்களையும் மென்று உண்ணுங்கள். 

   உண்ட பிறகு ஔவையார் பாடல்களையும் படியுங்கள். திருக்குறள் போல ஔவையார்-இன் பாடல்களும் நீதி நூல்களே.

1 comment:

  1. நல்லதொரு தேடல். மேலும் நிறைய எழுதிட வாழ்த்துகள்.

    ReplyDelete